தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 2021 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 


2021 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஜோதிட தம்பதி நாராயண அய்யர் ரெங்கன் உஷா ரெங்கன்..

நிகழும் மங்களகரமான 1196 ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருஷம் தக்ஷிணாயம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17-ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது கிருஷ்ணபக்ஷ த்விதீயை - வியாழக்கிழமை பின்னிரவு வெள்ளிக்கிழமை முன்னிரவு - பூசம் நக்ஷத்ரம் - அமிர்தயோகம் - கன்னியா லக்னம் -  கடக சந்திரா லக்னம் - மகர திரிகோணம் - ரிஷப நவாம்சம் - சிம்ம சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2021ம்  ஆண்டு பிறக்கிறது!..


நியுமராலஜிப்படி சென்ற 2020 கூட்டு எண் 4 ராகுவைக் குறிக்கும். 


வரும் 2021 கூட்டு எண் 5 புதனை குறிக்கும்.


பொதுவாக ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் அவரவருக்கு ஏற்றார் போல் ஒரு நம்பிக்கை ஒளிவட்டம் தெரியும் ஆனால் இந்த 2021 அப்படி ஒளிவட்டம் இந்தியாவிற்கு கண்டிப்பாக தெரியும் தமிழ்நாட்டுக்கு அதைவிட தெளிவாக தெரியும் நான் இங்கு குறிப்பிடுவது கிரகணத்தைப் போல வானத்தில் பார்க்கும் ஒளி வட்டம் கிடையாது அவரவர் மனதில் தோன்றும் எண்ண உயர்வை ஒளிவட்டம் என்று குறிப்பிட வேண்டியது உள்ளது.. 


உலக அரங்கில் இந்தியாவும் அதன் ஆன்மீக மாநில முதன்மை பெறும் தமிழ்நாடும் தெய்வ நம்பிக்கையில் தனித்துவமாக திகழ்கிறது எனவே ஜோதிட ரீதியில் பலன் அறிவது நம்பிக்கையின் எதிர்பார்ப்பு அன்றோ!..


2021 கன்னி லக்னம் மற்றும் கடக ராசியில் துவங்குகிறது. லக்னாதிபதி புதன் சூரிய சேர்க்கையுடன் குரு சம்பந்தம் பெற்று தனுசில் அமர்ந்திருப்பது குரு - புத ஆதித்யா யோகம்.  இது விஞ்ஞானிகளையும் அறிஞர்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் மேன்மையையும் அறிவாற்றல் மற்றும் மனிதநேயம் உள்ளவர்களையும் சரியான நேரத்தில் அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய இருக்கிறது வருடத் துவக்கத்தில் சனி ஆட்சி மற்றும் செவ்வாய் ஆட்சி பெறுவதால் பூமி எங்கும் மழை வளம் விவசாய வளம் நன்றாக இருக்கும் பருவகால மாற்றங்கள் சிறுசிறு இன்னல்கள் தந்தபோதும் திருப்தியாக அமையும் கல்வியில் ஆர்வம் இல்லாமல் பின்தங்கிப் போன பலருக்கும் இந்த புத ஆதித்யா யோகம் சிறப்பு பலனை இந்த ஆண்டு கொடுக்கும் அதாவது தேர்ச்சி பெறமுடங்கிப் போனவர்களுக்கு இந்த ஆண்டு மேன்மை தரும்


அதேநேரம் சுப கிரகம் குரு நீசம் பெற்று உள்ளதாலும் நீசம் பெற்ற இடத்தில் ராசிநாதன் சனி ஆட்சி பெறுவதாலும் மிகவும் நலிவுற்றும் பயம் பதட்டத்துடனும் உள்ளவர்களுக்கு ஒரு தனி திருப்பமாக உடல்நலத்திலும் பொருளாதாரத்திலும் மேன்மை கிடைக்கும் எந்த ராசியாகவும் இருந்தாலும் இந்த ஆண்டு பூராவும் புதனை மையமாக வைத்து பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்வது மிக்க மேன்மை தரும் அதேநேரம் பெருமாளுக்கு படைக்கும் அனைத்து பிரசாதங்களும் இல்லத்தில் பயன்படுத்த நமக்கு அக்கணமே கைமேல் பலன் தரும்.


வரும் காலங்களில் முன்னேற்றம் எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு ஏதாவது சிறு சிறு தடைகள் வருமானால் அவர்கள் அவரவர் ஜாதகத்தை ஒருமுறை கையில் எடுத்து பலன் பார்த்துக் கொள்வது நல்லது அனைவருக்கும் மீண்டும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

 1196 16ஆம் நாள் இவ்வாண்டின் மார்கழி துவக்கம்!

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை மாதம்.


மார்கழி மாத சிறப்பு


மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி! தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.

எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து ‘திருப்பாவை நோன்பு’ ஏற்றாள். ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

மார்கழி மாதம் பிறந்து விட்டால், எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து அபிஷேகம், பூஜை, ஆராதனை என்று பக்திப் பெருக்கை ஊரெங்கும் பரவச்செய்வர். மற்ற மாதங்களில் சற்று தாமதமாக எழுபவர்கூட மார்கழியில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தமக்குகந்த ஆண்டவனைத் துதிப்பர்.

கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழும்ஊர்

சோதி மணிமாடம் தோன்றும்ஊர் – நீதியால்

நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதும்ஊர்

வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்.

பாதங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் --- கோதைதமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு.

திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!...

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!...

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!...

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!...

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!...

உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே!...

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!...

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!...

வைணவர்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை, தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி, வேங்கடேச சுப்ரபாதம் போன்ற திருப்பாடல்களைப் பாடுவர். சைவர்கள் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை சிவன்மீது பாடிய திருப்பள்ளியெழுச்சி, திருவண்ணாமலையில் பாடிய திருவெம்பாவை முதலிய திருப்பாடல்களைப் பாடுவர். ஜீவாத்மா தனது தாமச குணத்தை நீக்கி, இறைவனைத் துதித்து பரமாத்வுடன் இணையவேண்டும் என்ற தத்துவத்தையே இவை விளக்குகின்றன. அதிகாலையில் இத்தகைய வழிபாடுகள் செய்யும்போது மனம் தெளிவுடன் இருக்கும். அதனால் மனோலயம் எளிதில் வசப்படும்.

மார்கழிக்கு ஏன் இத்தனை சிறப்பு?

இந்த மாதத்தில்தான் மகாவிஷ்ணுவுக்குகந்த வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளை கீதாஜெயந்தி என்று- கண்ணன் கீதை மொழிந்த நாளென்று கீதையை வாசிப்பார்கள்.

நடராஜப் பெருமானுக்குகந்த திருவாதிரையும் மார்கழியில்தான் அமைகிறது. அந்த நாளில் அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேகம் செய்து வீதியுலா வரச்செய்வர்.

"மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்' என்பது கண்ணன் வாக்கு. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த வைகாசியையோ, ராமர் அவதரித்த சித்திரையையோ, திருமலைவாசனுக்குகந்த புரட்டாசியையோ, தான் அவதரித்த ஆவணியையோ கண்ணன் குறிப்பிடவில்லை. "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்றே கூறுகிறார்.

நமக்கு ஒரு வருடமென்பது தேவர்களுக்கு ஒருநாள். மார்கழி மாதம் அவர்களுக்கு விடியல் பொழுது. நமது விடியல் பொழுதும் தேவர்களின் விடியல் பொழுதும் மார்கழியில் ஒன்றுசேர்கிறது. இந்த சமயத்தில் செய்யப்படும் ஆன்மிக விஷயங்கள் யாவும் அதிக பலன்தரும் என்பர். அந்த சமயத்தில் தெய்வீக அதிர்வலைகள் (Divine Vibrations) வெளிப்படுவதாக ஒலியியல் (Sound Theory) கூறுகிறது. இது மிக உன்னத நிலையைத் தரக்கூடியது. இதைப் பெறுவதற்காகத்தான் மார்கழி அதிகாலை வழிபாட்டை நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள்.

மார்கழி என்றாலே ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார் நம் மனக்கண்ணில் தோன்றுவாள். எல்லா வைணவ ஆலயங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவிக்கிணையாக ஆண்டாளும் போற்றப்படுகிறாள். என்ன காரணம்?

ஆண்டாள் ஆடிப்பூரத்தில் உதித்தவள். (பார்வதி, காமாட்சி ஆகியோரின் அவதார நட்சத்திரமும் பூரமே). இவளை பூமாதேவி அம்சம் என்பர். இவள் சிறுவயதிலிருந்தே அரங்கன்மீது பக்திகொண்டு, அவரை மணாளனாக அடைய விரும்பினாள்.

பிருந்தாவனத்தில் கோபியரான கன்னிப்பெண்கள், அதிகாலையிலேயே யமுனையில் நீராடி,

"காத்யாயனி மஹாமாயே

மஹாயோகின்ய தீஸ்வரி

நந்தகோப சுதம்

தேவி பதிம் மே குருதே நம:'

என்று தேவியைத் துதித்து, கண்ணனையே கணவனாக அடையவேண்டினர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. (மேற்கண்ட துதியைச் சொல்லி தேவியை வழிபட்டு நல்ல கணவனை அடைந்தோர் பலர்).

அதுபோல, வில்லிபுத்தூரையே பிருந்தாவனமாக பாவித்த கோதை தன்னை கோபிகையாக எண்ணிக்கொண்டு, அரங்கனை மணாளனாக அடைய மார்கழியில் நோன்பிருந்து திருப்பாவை என்னும் முப்பது பாடல்களைப் பாடினாள்.

"எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ' என்று மற்ற தோழியரையும் எழுப்பி, "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினே நேரிழையீர்' என்று அவர்களையும் அழைத்து வழிபடக் கூறினாள்.

மார்கழி நோன்பு முடிந்தது. மறுநாள் அதிகாலையில், "மதுசூதனன் வந்து தன் கைத்தலம் பற்றி' மணம் புரிந்துகொண்டதாக கனவு காண்கிறாள். இந்தக் கனவு பற்றி அவள் பாடிய 11 பாடல்களில் திருமணச் சடங்குகள் எல்லாவற்றையும் பாடியிருக்கிறாள்.

"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்'

என்ற ஆண்டாள் மொழியை அறியாதவர் யார்.

அவள் நோன்பு பலித்தது. பெரியாழ்வார் கனவில் தோன்றிய அரங்கன், "கோதையை மணப்பெண்ணாக ஸ்ரீரங்கம் அழைத்து வா' என்கிறான். திருவரங்கத்து பட்டாச் சாரியர்களுக்கும் இந்தத் தகவலைச் சொன்னான்.

அதன்படியே பெரியாழ்வார் மணக் கோலத்தில் கோதையை அழைத்துவர, கர்ப்பக்கிரகத்திலிருந்து "உள்ளே வருக' என்ற ஒலி கேட்கிறது. தளிர்நடையுடன் கோதை உள்ளே செல்ல, அவளது பௌதீக உடல் அரங்கனுக்குள் ஐக்கியமாகிறது. ஆண்டவனையே தன் பக்தியினால் மணந்து ஐக்கியமானதால் அவள் ஆண்டாளாகிறாள். எனவேதான் இந்த மார்கழி நோன்பு- கோதை நோன்பு உன்னதம் பெறுகிறது.

சிவபெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரும் தில்லை நடராஜருள் மறைந்தார். அதனால் தான் தில்லை நடராஜரை தரிசிக்க முக்தி என்பர்.

(திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் வசித்த வீட்டை கோவிலாகக் காணலாம். ஆண்டாளுடன் அரங்கன் சேவை சாதிக்கிறார்.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனை மூலவருக்கு எதிரில் காணலாம். ஆனால் வில்லிபுத்தூரில் பெருமாள் அருகிலேயே காணலாம். ஏன்? பெரியாழ்வார் கருடனின் அம்சம். அரங்கனுக்கு மாமனார். எனவே ஆண்டாள் ஒருபுறம்; மாமனார் மறுபுறம். வேறெங்கும் காணமுடியாத சேவை!).

ஆண்டாள் எவ்வாறு நோன்பிருந்தாள்?

திருப்பாவை இரண்டாவது பாடலில்,

"நெய்யுண்ணோம் பாலுண்ணோம்

நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்

மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம்'

என்கிறாள்.

"நெய், பால் உண்ணமாட்டோம். அதிகாலையிலேயே நீராடுவோம். கண்களுக்கு மையிடமாட்டோம். கூந்தலில் மலர்சூடி முடியமாட்டோம். செய்யத் தகாதவற்றைச் செய்யமாட்டோம்' என்கிறாள் கோதை. இவ்வாறு நோன்பிருந்தால் கிட்டும் பலனை அடுத்த பாடலிலேயே, "நல்ல மழை பெய்யும். தானியங்கள் சிறப்பாக விளையும். பசுக்கள் நிறைய பால் கறக்கும். செல்வம் குறையாமல் செழிக்கும்' என்கிறாள். கடைசிப் பாடலில் "எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்' என்கிறாள்.

திருப்பாவையின் 18-ஆவது பாடலுக்கு ஒரு சிறப்புண்டு.

"உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்'

என்பதே அப்பாடல். இது ஸ்ரீராமானுஜருக்கு மிகவும் பிடித்தமான பாடல். ஒருநாள் அவர் தன் குருநாதர் நம்பியாண்டார் நம்பியின் வீட்டுக்குச் செல்லும்போது இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே சென்றாராம். நம்பியின் மகள் அத்துழாய் கதவைத் திறக்க, சிறுமியான அவளை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாராம் ராமானுஜர். இவ்வளவு பெரியவர் இப்படி வணங்குகிறாரே என்று பயந்துபோன அந்தச் சிறுமி ஓடிப்போய் தந்தையிடம் சொல்ல, "அவர் உந்து மதகளிற்றன் பாடிக்கொண்டு வந்தாரா?' என்று சிரித்தபடி கேட்டாராம் நம்பி. ராமானுஜருக்கு அந்தச் சிறுமி நப்பின்னையாகவே காட்சி தந்தாளாம்.

இவ்வாறு பல பெருமைகள் பெற்ற மார்கழி மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து நீராடி, அவரவர்க்கு விருப்பமான தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு குருவருள், திருவருள் பெற்று மகிழ்வோம்.

 மார்கழி மாத பாவை நோன்பு இருக்க தயாரா ?

 

சார்வரி வருடம் மார்கழி மாதம் ஒன்றாம் நாள் 16 12 2020 புதன்கிழமை ஆரம்பம்

மார்கழி பூஜை ஆரம்பம்


திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அன்னை அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றார். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும்,  தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தார் மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் முதலிய உணவு வகைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த விரதம் அமைந்தது. இந்த விரதத்தை இப்போதும் திருமண நடக்கவிருக்கும் மகளிர் மற்றும் ஆடவர் அனுஷ்டிக்கலாம். காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். உதாரணமாக, மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே  இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும்வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும். விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனையும் மற்றும் மனைவி தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.


மார்கழி நைவேத்யம்: மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களிலுமே அதிகாலையில் பூஜை நடக்கும். கோயில்களில் மட்டுமின்றி வீட்டையும் சுத்தம் செய்து, காலை 8.30 மணிக்குள் எளிய பூஜை ஒன்றை பெண்கள் செய்யலாம். திருமணமான பெண்கள் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும். திருவிளக்கேற்றி, நம் இஷ்ட தெய்வங்களுக்கு பூச்சரம் அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த பாடல்களை பாட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், சுண்டல் முதலானவை செய்வதற்கு எளியவையே. கற்கண்டு சாதம் அமுதம் போல் இருக்கும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். பாவை நோன்பு இருக்கும் பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு சாதம் முதலானவற்றை நைவேத்யம் செய்யலாம்.


திருப்பாவை பிறந்த கதை: கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள். கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று. திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவைஎன்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று. முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது. ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது. இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலை புரிகிறது.


வைகறை-மார்கழி: மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப்பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின்  சிறப்பு. ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளினார். காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் கடவுள். இவர்களுக்கு இன்னது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள். எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ணன், மாதங்களில் நான் மார்கழி என்றார். இவரது திருவாய் மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்து விட்டது இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு.


ஓசோன் வாயு: மார்கழி வைகறைக் காலத்துப் பனியை அனுபவிப்பது ஒரு சுகம். பனி, படிப்படியே அதிகம் ஆகின்றபோது, அதை அனுபவிக்க தகுந்த உடல் உறுதியும், உள்ள உறுதியும் இருக்க வேண்டும். பனிப்படலத்தை ஊடுருவி வருகின்ற மெல்லிய காற்று தருகின்ற குளிர்ச்சி, சுகம் சுகமே. இந்த இரட்டைச் சுகங்களுடன் மற்றொரு சுகம் மார்கழியில் மட்டும் அதிகமாக கிடைக்கின்றது.  வளிமண்டலத்தில் ஓசோன் என்ற வாயுப்படலம் நில உலகத்தில் இருந்து 19 கி.மீ. உயரத்தில் பரந்துள்ளது. இப்படலம் சூரியனிடம் இருந்து வருகின்ற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது. விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. மார்கழி விடியற்காலையில், ஏதோ ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகின்றது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்தனர். அந்த நேரத்தில் இறைப்பணிகளைச் செய்வதற்கும், அந்தப் பணிகளின் மூலமாகவே பக்திப் பரவசத்தைப் பெறுவதற்கும் முயன்றனர். பூஜை செய்தனர். நோன்பு நோற்றனர். இவ்வாறு மார்கழி விடியலுக்கு ஒரு தனிப்பெருமை கிடைத்தது.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை